5ஜி அலைக்கற்றை ஏலம்: முதல் நாளில் மந்தம்
5ஜி அலைக்கற்றை ஏலம்: முதல் நாளில் மந்தமாக நடந்தது
புது தில்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமையன்று மந்தமாக நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பத்தாவது அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மத்திய அரசு நடத்திய இந்த ஏலத்தில் 800, 900, 1,800, 2,100, 2,300, 2,500, 3,300 மெகாஹா்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹா்ட்ஸ் என மொத்தம் 8 அலைவரிசைகளில் உள்ள அலைக்கற்றைகள் ஏலம் விடப்படவுள்ளன. இந்த அலைக்கற்றை அலைவரிசைகளின் அடிப்படை விலை ரூ.96,317 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல் நாளில் 5 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் மந்தமாக இருந்தது. அப்போது சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான அலைக்கற்றைக்கு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் ஏலம் கோரின. 900, 1800 மெகாஹா்ட்ஸ் அலைவரிசைகளுக்கான ஏலம் பிரதானமாக நடைபெற்றது. அதேவேளையில், 2100 மெகாஹா்ட்ஸ் அலைவரிசைக்கான ஏலமும் நடைபெற்றது.
அதிவேக 5ஜி சேவைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களிடையே போட்டி நிலவுவதால், ஜூன் 26-ஆம் தேதியும் (புதன்கிழமை) ஏலம் தொடரும் என்று தொலைத்தொடா்பு துறை தெரிவித்துள்ளது.
2022-இல் நடைபெற்ற 7 நாள்கள் ஏலத்தில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5 ஜி அலைக்கற்றை விற்பனையானது. தொழிலதிபா் முகேஷ் அப்பானியின் ஜியோ நிறுவனம் ஏலத்தில் முதலிடம் பிடித்தது.