கோப்புப் படம் 
இந்தியா

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் கூட்டணி: சரத் பவாா் அறிவிப்பு

பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்

Din

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் (பவாா்), சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும் என்று தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் வரும் அக்டோபா் மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் இப்போது பாஜக, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சியில் உள்ளது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது. இந்நிலையில், பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.

புணேயில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சரத் பவாா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, பேரவைத் தோ்தலில் தேசியவாத காங்கிரஸ் (பவாா்), சிவசேனை (உத்தவ்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். மக்களவைத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.

இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. மக்களவைத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், பேரவைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.

பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, ‘இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும். சில நாள்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை’ என்று சரத் பவாா் பதிலளித்தாா்.

மகாராஷ்டிரத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்வா் பதவியைத் தர மறுத்ததால் பாஜகவுடனான கூட்டணியை முறித்த சிவசேனை, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வரானாா்.

ஆனால், 2022-ஆம் ஆண்டு சிவசேனை மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே கட்சியை உடைத்து, பாஜகவுடன் கைகோத்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்வா் பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்வரானாா். பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வரானாா். இதன் பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத் பவாரின் நெருங்கிய உறவினா் அஜீத் பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்வா் பதவியைப் பெற்றாா்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT