‘கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்’: மோடியின் முழு உரை
‘பாஜகவுக்காக உழைத்து உயிரை விட்டவர் ஆடிட்டர் ரமேஷ்’ எனக் கூறி பொதுக்கூட்ட மேடையில் கண்ணீர் விட்டார் மோடி.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கோவையில் நேற்று வாகனப் பேரணியில் ஈடுபட்ட மோடி, சேலத்தில் இன்று கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது:
Advertisement
Advertisement
“கோட்டை மாரியம்மனை வணங்கி உரையை தொடங்குகிறேன். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கும் எனக்கும் கிடைத்து வரும் மிகப்பெரிய மக்கள் ஆதரவை நாடே பார்த்து கொண்டுள்ளது.
கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டே பயணித்தேன். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவை கண்டு திமுக தூக்கம் கலைந்துவிட்டது.
இந்த முறை தமிழகத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும், பாஜகவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு என்று மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு, மூன்றாவது பொருளாதாரமாக மாறுவதற்கும், விவசாயிகள் பயன்பெற 400 தொகுகளை வெற்றி பெற வேண்டும்.
தே.ஜ. கூட்டணி வலுபெற்றுள்ளது. பாமக நமது கூட்டணியில் இணைந்துள்ளது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக தொண்டர்களை வரவேற்கிறேன்.
சேலத்துக்கு வந்த தருணத்தில் நெருங்கிய நண்பர் கே.என்.லட்சுமணனை நினைவுகூர்கிறேன். தமிழகத்தில் பாஜக காலூன்ற பாடுபட்டவர். அவசரநிலை பிரகடனம் செய்த காலத்திலும் தொடர்ந்து பாஜகவுக்காக உழைத்தார்.
மேலும், கட்சிக்காக உழைத்து உயிரைவிட்ட ஆடிட்டர் ரமேஷை நினைவுகூர்கிறேன். சமூக விரோதிகள் அவரை கொன்றுவிட்டனர். இந்நேரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
காங்கிரஸ் - திமுக கூட்டணியின் இந்தியா கூட்டணி எண்ணம் என்று தெரிந்துவிட்டது. ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சக்தி என்ன என்பது தெரியும். அதனை அளிக்க நினைக்கிறார்கள் இந்தியா கூட்டணியினர்.
தமிழ்நாட்டில் கோட்டை மாரியம்மன், காமாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மனை சக்தியின் வடிவமாக கொண்டாடுகிறோம். ஆனால், காங்கிரஸ்-திமுகவினர் சக்தியின் வடிவமான சநாதானத்தை அழிப்போம் எனக் கூறுகிறார்கள்.
இந்தியா கூட்டணியினர் ஹிந்து மதத்துக்கு எதிராக கருத்தியல் உருவாக்கி வருகிறார்கள். ஹிந்து மதத்தை வேகமாக தாக்கும் நேரத்தில், பிற மதத்துக்கு எதிராக ஒரு கருத்தையும் சொல்வதில்லை. தமிழ்நாட்டின் கலாசாரமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதற்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது. செங்கோலை அவமதித்தார்கள்.
சக்தியின் தன்மையை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். ஏப்ரல் 19 தமிழகத்தில் இருந்துதான் அழிவு தொடங்கவுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு கேடயம் போல் இருந்து அவர்களுக்காக நான் பணி செய்கிறேன். உதாரணமாக கேஸ் சிலிண்டர், இலவச மருத்துவம், இலவச ரேஷன், வீட்டைத்தேடி குடிநீர் வழங்கினோம். முத்ரா கடனில் தமிழகத்துக்குதான் அதிக பயன். பெண்கள் தான் பாஜகவின் பாதுகாப்பு கவசம்.
ஜெயலலிதாவை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள் என்பதை நினைத்து பாருங்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
திமுகவும், காங்கிரஸின் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஊழலும், குடும்ப ஆட்சியும் செய்பவர்கள். தமிழகத்தில் திமுக 5ஜி நடத்தி வருகின்றது. அவர்களின் 5-வது தலைமுறையை ஆட்சிக்கு வர வேலை செய்கிறார்கள்.
மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை நினைவு கூர்கிறேன். அவர் மனது வைத்திருந்தால் பிரதமராகி இருப்பார். ஆனால், காங்கிரஸ் குடும்ப ஆட்சி அவரை வளரவிடவில்லை.
தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் காமராஜர். அரசியலில் நேர்மை என்றால் காமராஜர். அவர் உருவாக்கிய மாணவர் மதிய உணவுத் திட்டம் மிகப்பெரியது. ஏழை எளிய மாணவர்களுக்கு அவர் ஏற்படுத்திய இந்த திட்டம், மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்குவதற்கான வழிகாட்டுதலாக இருந்தது.
தேசிய சாலைகள், ஐஐடிக்கள், 20-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் கல்லூரிகள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்புக்காக ரூ. 260 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கவுள்ளேன். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். தமிழை பேச முடியவில்லை என்று கவலையாக உள்ளது.” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.