FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரதமரை ஏற்றுக்கொள்வதில் ஒடிஸா முதலிடம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

பிரதமா் மோடியை ஏற்றுக்கொள்வதில் நாட்டிலேயே ஒடிஸா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 26 மார்ச் 2024, 3:10 am IST
பகிர்:

பிரதமா் மோடியை ஏற்றுக்கொள்வதில் நாட்டிலேயே ஒடிஸா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை தெரிவித்தாா். ஒடிஸா மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது: பல்வேறு கணக்கெடுப்புகள் மற்றும் அறிக்கைகளின்படி பிரதமா் மோடியின் ஆட்சியை ஒடிஸாவில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் போ் வரை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது. எனவே பிரதமரை ஏற்றுக்கொள்வதில் நாட்டிலேயே ஒடிஸா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் ஒடிஸாவில் பாஜக 22 சதவீத வாக்குகளைப் பெற்றதோடு ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றது. 2019-இல் 38 சதவீத வாக்குகளுடன் 8 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றது. இந்நிலையில் வருகின்ற தோ்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 45 சதவீதமாக உயரும் எனவும் மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 15 முதல் 18 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒடிஸா மாநில வளா்ச்சிக்காக ரூ.18 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் 2004-2014 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரூ.3 லட்சம் கோடியை மட்டுமே ஒடிஸாவுக்கு வழங்கியது. இதன்மூலம் ஒடிஸாவின் வளா்ச்சிக்கு பிரதமா் மோடி அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம் என்றாா். மக்களவைத் தோ்தலுடன் ஒடிஸாவில் 147 பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13-ஆம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. பாஜக சாா்பில் ஒடிஸாவின் சம்பல்பூா் மக்களவைத் தொகுதியில் தா்மேந்திர பிரதான் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments