’எனக்குப் பின் யார்..?’ -பிரதமர் மோடி யாரைச் சுட்டிக்காட்டுகிறார்?
தான் வாரிசு அரசியலில் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் பிரதமர் மோடி.
பிகார் மாநிலம் மகாராஜ்கஞ்சில் இன்று(மே 21) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்தியா கூட்டணியில் இருப்போர் வகுப்புவாத பிரிவினையை தூண்டுவோர் எனவும், வாரிசு அரசியலில் ஈடுபடுவோர் எனவும் விமர்சித்துள்ளார்.
ராகுல் கந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் பிறக்கும்போதே தங்கத்தட்டுடன் பிறந்தவர்கள் என்று மறைமுகமாக அவர்களை விமர்சித்துள்ளார் மோடி.
மறுபுறம், தான் வாரிசு அரசியலில் ஈடுபடவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். “எனக்குப் பின் யாருமிலை, நாட்டு மக்களே எனது வாரிசு” என்று பேசியுள்ளார் மோடி.
மேலும், தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாபில் இடம்பெயர்ந்து வாழும் பிகார் மாநிலத்தோரை, அங்குள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் அவதூறாகப் பேசி வருவதாகவும், ஆனால் அவற்றை காங்கிரஸ் குடும்பம் கண்டுகொள்வதில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
”வாக்களிப்பதன் மூலம் மக்களவை வேட்பாளரை மட்டும் வாக்காளர்கள் தேர்வு செய்யப்போவதில்லை, நாட்டின் பிரதமரை வலிமைப்படுத்தப் போகிறீர்கள்” என வாக்காளர்களிடம் தெரிவித்துள்ளார்.
”பட்டியலினத்தோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டைப் பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக காங்கிரஸ் அரசமைப்பை மாற்ற விரும்புகிறது. அம்பேத்கர் இல்லாமல் போயிருந்தால், பட்டியலினத்தோருக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீட்டை வழங்க முன்னாள் பிரதமர் நேரு அனுமதித்திருக்கமாட்டார்.”
”மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவுடனேயே இந்தியா கூட்டணி நீர்த்துப் போய்விட்டது. வகுப்புவாதம், இனவாதம், வாரிசு அரசியல் ஆகிய 3 தீய குணங்களை ஒருங்கே பெற்றிருப்பது இந்தியா கூட்டணி” என்று கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார் பிரதமர் மோடி.
கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏற்படுத்தியிருந்த புதைகுழிகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அடுத்த 5 ஆண்டு கால ஆட்சியில் முன்னேற்றத்தை விரைவுபடுத்த உத்வேகத்துடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.