ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து: 6 தொழிலாளர்கள் பலி!
மும்பையில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர்.
மகாராஷ்டிரத்தில் உள்ள டோம்பிவிலி எம்ஐடிசி 2 ஆம் கட்ட ரசாயன தொழிற்சாலையில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 48-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் நெப்சர், எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தீவிபத்து முதலில் அமுதன் கெமிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளது. பின்னர், அருகில் இருந்த பல தொழிற்சாலைகளுக்கும் தீ பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை என்று மகாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு சத்தம் ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வெடிவிபத்தில் அருகில் உள்ள கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டதுடன், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தன.