விசாகப்பட்டினம்: ரயிலில் அசுத்தமான கழிவறை விவகாரம் தொடர்பாக பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க விசாகப்பட்டினம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் 3-ஆவது ஏ.சி.வகுப்பில் திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினம் வந்துள்ளார்.
அப்போது, அவர் பயணித்த பெட்டியின் கழிப்பறை மோசமான நிலையில் இருந்துள்ளது. கழிப்பறையில் தண்ணீரும் வரவில்லை. மேலும் பயணம் செய்த ரயில் பெட்டியில் குளிர்சாதனங்களும் சரியாக இயங்கவில்லை.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் மூர்த்தி புகார் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் சரி செய்ய முயன்றும் சரியாகவில்லை. இதையடுத்து துவ்வாடா நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது அங்குள்ள அலுவலகத்திலும் மூர்த்தி புகார் தெரிவித்துள்ளார். அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ரயிலில் குளிர்சாதன பெட்டியில் காற்று வசதி இன்றியும், சுதாராமற்ற முறையிலும் பயணம் செய்ததாக இந்திய ரயில்வே மீது விசாகப்பட்டினம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் மூர்த்தி.
வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.25,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 என மொத்தம் ரூ.30,000 வழங்குமாறு தென் மத்திய ரயில்வே மண்டலத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.