பணி அழுத்தமா? அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணம்!
பணி அழுத்தம் காரணமாக அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணமடைந்தார்.
புணேவில் பட்டயக் கணக்காளர் படித்து முடித்த பெண் பணி அழுத்தம் காரணமாக மரணமடைந்த ஒரு சில நாள்களில், லக்னௌவில் அலுவலக நாற்காலியிலிருந்து விழுந்து லக்னௌ பெண் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் கடுமையான பணி அழுத்தத்தில் இருந்ததாக, அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சதாஃப் பாத்திமா என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பெண் ஊழியர், தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவர், கூடுதல் உதவி துணைத் தலைவராக, கோமதிநகரில் உள்ள விபுதி கந்த் வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தவர் என்று கூறப்படுகிறது.
Advertisement
வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை, அவர் நாற்காலியிலிருந்து விழுந்து இறந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். உடனடியாக அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கவலை தெரிவித்திருக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அனைத்து நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். மனித வளத்தை எப்போதுமே இழந்துவிட்டால் சரி செய்யவே முடியாது, இதுபோன்ற திடீர் மரணங்கள், வேலை அழுத்தம் குறித்த கேள்வியை எழுப்புகிறது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.