ஹத்ராஸ் பயங்கரம்: பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவன் நரபலி!
ஹத்ராஸ் பயங்கர சம்பவத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளார்.
ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள பள்ளியின் மாணவர் விடுதியில், 2ஆம் வகுப்பு மாணவர் கடந்த வாரம் மரணமடைந்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.
பள்ளியின் வளர்ச்சி, புகழ்பெற வேண்டி பள்ளியின் இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து, 2ஆம் வகுப்பு மாணவரை, விடுதியில் நரபலி கொடுத்திருப்பதாக, காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரஸ்காவனில் உள்ள டிஎல் பப்ளிக் பள்ளியின் இயக்குநர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
அண்மையில், இந்த ஐந்து பேரும் சேர்ந்து மற்றொரு சிறுவனையும் கொல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பள்ளியின் வளர்ச்சி மற்றும் புகழ்பெற வேண்டும் என்று நடத்தப்பட்ட பூஜையின் ஒரு பகுதியாக, மாணவர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளார் என்றும், மற்றொரு மாணவரையும் நரபலி கொடுக்க முயன்று அது நடக்காமல் போயிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் காவல்துறை கூறுகிறது.
இந்த பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இங்குள்ள 1 - 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடுதியில் தங்கிப் படித்து வந்த 2ஆம் வகுப்பு மாணவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுவன், கிரிஷண் குஷ்வாஹா என்பவரின் மகன் ஆவார். கிரிஷன் தில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த திங்கள்கிழமை, தனது படுக்கையிலேயே, சடலமாக சிறுவன் இருந்துள்ளான். உடனடியாக இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல், பள்ளி இயக்குநர் தினேஷ், தனது காரில் சிறுவனின் உடலை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றிருக்கிறார். இதற்கிடையே, சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, கிரிஷணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் விடுதிக்கு விரைந்துள்ளார். ஆனால், அங்கு மகன் இல்லாததும் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
காவலர்கள் வந்து, சோதனை நடத்தியதில், தினேஷின் காரில் சிறுவனின் உடல், கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவனின் உடல் கூறாய்வு முடிவில், அவர் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும், ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான் மாணவர் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.