முகப்பு
இந்தியா

அயோத்தியில் கேஎஃப்சி உணவகம் வைக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை!

அயோத்தியில் கேஎஃப்சி உணவகத்தை அனுமதிக்க கோயில் நிர்வாகம் தரப்பில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 4:57 PM
பகிர்:

அயோத்தியில் கேஎஃப்சி உணவகத்தை அனுமதிக்க கோயில் நிர்வாகம் தரப்பில் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் கடந்த 22-ஆம் தேதி பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23-ஆம் தேதி முதல் மக்களுக்கு பால ராமரை தரிசித்து வருகிறார்கள். வாரந்தோறும் 10 முதல் 12 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், கோயில் சுற்றுப்புறங்களில் உள்ளூர் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை உணவகங்கள் உள்ளிட்ட கடைகளை அமைக்க விருப்பம் தெரிவித்து வருகின்றன.

ஆனால், பஞ்ச் கோஷி என்றழைக்கப்படும் கோயிலின் 15 கி.மீ. சுற்றளவுள்ள புனித பூமியில் அசைவ உணவுகள், மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் லக்னெள சாலையில் கேஎஃப்சி உணவகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், கேஎஃப்சி உள்ளிட்ட பன்னாட்டு உணவகங்களை அயோத்தியில் தொடங்க வரவேற்கிறோம். ஆனால், உணவகத்தில் சைவ உணவுப் பட்டியலில் மட்டுமே இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அயோத்தி கோயிலில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டோமினோஸ் பீட்சா கடையில் சைவ வகைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.