கோயில் தூய்மைப் பணியில் பாஜகவினர்!
ஜனவரி 22 நடக்கவிருக்கும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள 5,000 வழிபாட்டுத்தளங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களையும் சுத்தம் செய்யும் இயக்கத்தை பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கிவைத்துள்ளார். ஜனவரி 22 நடக்கவிருக்கும் ராமர் கோயில் சிலைப் பிரதிஷ்டை நிகழ்வினை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் வழிபாட்டுத்தளங்களை சுத்தம் செய்யும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் உள்ள கோதண்டசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சுத்தம் செய்யும் பணியில் அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, பிரதமரின் வழிகாட்டுதலின்படி ஜனவரி 22 நடைபெறவுள்ள சிலைப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள 5000 வழிபாட்டுத்தளங்களை பாஜகவின் சகோதர சகோதரிகள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறோம்' எனக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ராமா் கோயில் பிரசாதம் என்ற பெயரில் அமேசானில் இனிப்புகள் விற்பனை: மத்திய நுகா்வோா் ஆணையம் நோட்டீஸ்
ராமேசுவரத்தில் உள்ள கல்யாண கோதண்ட ராமசுவாமி கோயிலை பாஜக பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன் வி பாலகணபதி, ஏபி முருகேசன் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டுத்துறையின் மாநிலத் தலைவர் எம் நாச்சியப்பன், ராமநாதபுர மாவட்டத் தலைவர் தரணி ஆர் முருகேசன் ஆகியோர் இணைந்து சுத்தம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் பாஜகவுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கோயில் விழாவின் மூலம் பாஜக அரசியல் லாபம் ஈட்ட முயல்வதாக குற்றம் சாட்டி, ராமர் கோயில் திறப்பு விழா அழைப்பை பல அரசியல் தலைவர்கள் நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.