பள்ளி தலைமையாசிரியராக ஒரு முஸ்லிம் நபர் இருந்ததால் அந்த பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் விஷத்தைக் கலந்த வலதுசாரி அமைப்பு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் அரசுப் பள்ளியில் முதல்வர் பொறுப்பிலிருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவொரு ஆசிரியரை பணியிலிருந்து நீக்குவதற்காக அந்தப் பள்ளியின் குடிநீர்த்தொட்டியில் சிலர் விஷத்தைக் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெலகாவி மாவட்டத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இந்த அசம்பாவிதம் நடைபெற்றது.
இந்த வழக்கில் உள்ளூரில் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படும் ‘ஸ்ரீ ராம் சேனை’ அமைப்பின் தலைவர் ஒருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹூலிக்கட்டி பகுதியில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக தலைமையாசிரியராக இருப்பவர் சுலேமான் கோரிநாய்க். இந்தநிலையில், அவர் மீது களங்கம் ஏற்படுத்தி அவருக்கு அவப்பெயர் பெற்றுக்கொடுத்து அவரை பணியிலிருந்து விரட்ட மேற்கண்ட கைது செய்யப்பட்ட நபர்கள் முயற்சித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.
விஷம் கலந்த குடிநீரை பருகிய மாணவர்களில் 12 பேர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன்பின்னரே, பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவனும் உடந்தையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த மாணவனிடம் விஷம் அடைக்கப்பட்ட ஒரு குப்பியைக் கொடுத்து அந்த நபர்கள் குடிநீர்த் தொட்டியில் கலக்க மிரட்டியதாக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத வெறுப்பால் இந்த கொடுஞ்செயல் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.