'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தல் ஆணையம், வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று கூறி பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
அதேபோல பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளை பெற தேர்தல் ஆணையமே உதவி வருவதாக ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
'வாக்குத் திருட்டு' என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இதற்கு பதில் அளித்துள்ளது.
'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்தி தவறான கதையை உருவாக்குவதற்குப் பதிலாக உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
"ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது 1951-1952 ஆம் ஆண்டு தேர்தல் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. யாரேனும் எந்த தேர்தலிலாவது 2 முறை வாக்களித்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்துடன் பகிர வேண்டும். பதிலாக, எந்த ஆதாரமும் இல்லாமல் 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களை பயன்படுத்த வேண்டாம்.
இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தவறான கருத்துகளை உருவாக்குவது, கோடிக்கணக்கான வாக்காளர்களின் மீதான நேரடியான தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதலும்கூட" என்று கூறியுள்ளது.
இதையும் படிக்க | இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.