ஆதாரம் கொடுங்கள்; 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையம்
வாக்குத் திருட்டு என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில் கருத்து...
'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பிகாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தேர்தல் ஆணையம், வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுதொடர்பான தரவுகள், தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
Advertisement
Advertisement
தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் என்று கூறி பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.
அதேபோல பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளை பெற தேர்தல் ஆணையமே உதவி வருவதாக ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
'வாக்குத் திருட்டு' என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இதற்கு பதில் அளித்துள்ளது.
'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களைப் பயன்படுத்தி தவறான கதையை உருவாக்குவதற்குப் பதிலாக உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
"ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது 1951-1952 ஆம் ஆண்டு தேர்தல் முதலே நடைமுறையில் இருந்து வருகிறது. யாரேனும் எந்த தேர்தலிலாவது 2 முறை வாக்களித்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்துடன் பகிர வேண்டும். பதிலாக, எந்த ஆதாரமும் இல்லாமல் 'வாக்குத் திருட்டு' போன்ற மோசமான சொற்களை பயன்படுத்த வேண்டாம்.
இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தவறான கருத்துகளை உருவாக்குவது, கோடிக்கணக்கான வாக்காளர்களின் மீதான நேரடியான தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதலும்கூட" என்று கூறியுள்ளது.
The Election Commission has asked opposition not to use dirty words like 'vote chori' and to provide evidence for their allegations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.