FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மீனவர் பிரச்னை, ஆளுநர் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்

மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.

Updated On : 12 பிப்ரவரி 2025, 3:40 am IST
பகிர்:

நமது நிருபர்

மக்களவையில் மீனவர்கள் பிரச்னை, தமிழக ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவற்றை தமிழக எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை எழுப்பினர்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்திற்கு கொண்டுவரும் நேரத்தின்போது மக்களவை திமுக குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு பேசுகையில் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்கிறது. கடந்த ஆண்டில் 528 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நிகழாண்டின் 40 நாள்களில் 77-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது சம்பவங்களும் நடந்துள்ளன. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நிர்பந்தித்தும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்தும், சிறைபிடித்தும் செல்கின்றனர். இலங்கை கடற்படையினர் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து இந்திய மீனவர்களைத் தாக்குகின்றனர்.

Advertisement

Advertisement

கடந்த 27-ஆம் தேதி 2 மீனவர்கள் சுடப்பட்டுள்ளனர். பிப்.8-ஆம் தேதி 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். தமிழக முதல்வர் இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது அந்நாட்டில் 97 மீனவர்களும், 216 படகுகளும் காவலில் உள்ளனர்.

இந்த விவகாரத்தை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. இரு தரப்பு நாட்டு மீனவ சமூகங்களையும் அழைத்து, நவம்பர் 2016-இல் விவாதிக்கப்பட்டபோல் விவாதிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தை அவர்களாகவே விவாதிக்க முடியும்.

அரசால் இந்த விவகாரத்தை தீர்க்க முடியாவிட்டால் அவர்களாகவே தீர்வு காண அனுமதிக்க வேண்டும் என்றார் அவர்.

ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு: விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், "ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு விவகாரம் கவலை அளிப்பதாக உள்ளது. அண்மையில் கோயம்புத்தூர்-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் பாலியல் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கர்ப்பிணி தூக்கி வீசப்பட்டார். இதனால், மத்திய ரயில்வே அமைச்சர் ரயில்களில் பெண்களின் உயிர், உடைமை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.

யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு: தென் சென்னை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்வைத்த கோரிக்கையில், "மத்திய அரசு 2025-க்கான யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இது கூட்டாட்சி அமைப்புக்கு பெரும் சவாலாகவும், மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை குறைப்பதாகவும் உள்ளது.

கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. இதை மத்திய அரசு மறந்துவிடக் கூடாது.

இந்த நெறிமுறைகள் துணைவேந்தர் தேடுதல் குழுவில் மத்திய அரசின் பிரநிதித்துவத்தை கட்டாயமாக்கும் வகையில் உள்ளது. மேலும், நியமனங்களில் ஆளுநருக்கு அதிகாரம் அளிப்பது பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகத்தின் விதிகளுக்கு எதிரானதாகும்' என்றார்.

கைத்தறி பூங்கா: வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த் பேசுகையில், "வேலூர் தொகுதியில் உள்ள குடியாத்தம் பகுதி நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக கைத்தறி பூங்கா அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். இதே அவையில் இந்தக் கோரிக்கையை நான் பலமுறை எடுத்து வைத்தாôலும் கூட, அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. இந்தமுறையாவது அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

புதிய வந்தே பாரத் ரயில்: திருவண்ணாமலை தொகுதி திமுக உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை முன்வைத்த கோரிக்கையில், "சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கவும், சென்னை - ஜோலார்பேட்டை வந்தே மெட்ரோ ரயில் இயக்கவும் மத்திய ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments