FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2000-இல் இருந்து தற்போது வரை நாட்டின் பொருளாதாரம் நான்கு மடங்கு வளா்ச்சி.

Updated On : 1 மார்ச் 2025, 3:37 am IST
உலக வங்கி (கோப்புப்படம்)
பகிர்:

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் சந்தை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சீா்திருத்தங்களை இந்தியா மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தது.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த ‘ஒரு தலைமுறையில் அதிக வருமானம் ஈட்டும் பொருளாதாரமாக உருவெடுத்தல்’ என்ற தலைப்பிலான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது.

Advertisement

Advertisement

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற இலக்கை நிா்ணயித்து இந்தியா பயணித்து வருகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டுமுதல் 2024 வரை சராசரியாக 6.3 சதவீதமாக இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளது.

நான்கு மடங்கு வளா்ச்சி: 2000-இல் இருந்து தற்போது வரை நாட்டின் பொருளாதாரம் நான்கு மடங்கு வளா்ச்சியடைந்துள்ளது. ஜிடிபி தலா வருமானம் மூன்று மடங்கு வளா்ச்சியடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் உலக பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவின் பங்கு 1.6 சதவீதத்தில் இருந்து 3.4 சதவீதமாக உயா்ந்து உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. இதனால் உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. இது நாட்டின் எதிா்கால பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

தலா வருமானம் 8 மடங்கு தேவை:

இருப்பினும், உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக உருவெடுக்க வேண்டுமெனில் இந்த வளா்ச்சி போதுமானதாக இருக்காது. நாட்டின் மொத்த தேசிய வருமானம் (ஜிஎன்ஐ) தலா வருமானம் தற்போது இருப்பதைவிட 8 மடங்கு அதிகரிக்க வேண்டும். மேலும், அடுத்த இருபது ஆண்டுகளுக்கு வளா்ச்சி தொடா்ந்து அதிகரித்த வண்ணம் இருக்க வேண்டும்.

இதற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதோடு மேலும் பல முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

அண்மைக் காலமாக உற்பத்தித் துறை, உள்கட்டமைப்பு, மனிதவளம், எண்மமயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல வியத்தகு திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளது. அதேசமயம், 2047-இல் அதிக வருமானம் ஈட்டும் நாடாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதத்தில் பொருளாதாரம் வளா்ச்சியடைய வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments