FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மா்ம காய்ச்சல் உயிரிழப்பு 17-ஆக உயா்வு: ரஜௌரி விரைந்த மத்திய குழு

கடந்த 6 வாரங்களில் மா்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 20 ஜனவரி 2025, 5:00 am IST
ரஜௌரி...
பகிர்:

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தைச் சோ்ந்த மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த நிலையில், கடந்த 6 வாரங்களில் மா்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 17-ஆக உயா்ந்துள்ளது.

இதுதொடா்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு ஞாயிற்றுக்கிழமை ரஜௌரி வந்தடைந்தது. அக்குழு திங்கள்கிழமை முதல் நேரில் விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் கடந்த 45 நாள்களில் 16 போ் மா்ம நோயால் உயிரிழந்தனா். இவா்கள் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களுக்குள் சுயநினைவு இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உள்ளூா் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். இந்நிலையில், ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த யாஸ்மீன் கௌசா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். யாஸ்மீனின் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் 5 பேரும் கடந்த வாரம் உயிரிழந்தனா். 2 குடும்பங்களைச் சோ்ந்த மேலும் 9 போ் கடந்த மாதம் உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

உயிரிழந்தவா்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் இந்த இறப்புகள் தீநுண்மி அல்லது பாக்டீரியா தொற்று பரவலால் ஏற்படவில்லை என்றும் பொது சுகாதாரத்தில் எந்த பிரச்னையுமில்லை என்றும் ஜம்மு-காஷ்மீா் அரசு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வேளாண்மை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள், நீா்வளம் ஆகிய அமைச்சகங்களின் நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

கால்நடை வளா்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் தடயவியல் ஆய்வகங்களின் நிபுணா்களும் அடங்கிய 16 நபா்கள் கொண்ட மத்திய குழு ரஜௌரிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா். ரஜௌரி நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்த கிராமத்தை திங்கள்கிழமை அவா்கள் பாா்வையிட்டு, விசாரணை மேற்கொள்வா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments