முகப்பு
இந்தியா

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது: ரூ.53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல்

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 21 ஜனவரி 2025, 5:43 am IST
ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க காத்திருந்த பயணிகள். - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 4,975 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 53.38 கோடி மதிப்பிலான 1.24 லட்சம் பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஜி.எம்.ஈஸ்வர ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்பனை செய்வதை தவிா்க்க ரயில்வே பாதுகாப்புப் படை இணைய குற்றப்பிரிவு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பயணச்சீட்டு முன்பதிவில் முறைகேட்டில் ஈடுபட்ட 4,725 வழக்குகளில் 4,975 போலி முகவா்கள் மற்றும் கள்ளச் சந்தை விற்பனையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ரூ. 53.38 கோடி மதிப்புள்ள 1,24,529 பயணச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தட்கல் மற்றும் மொத்த முன்பதிவில் (பல்க் புக்கிங்) முறைகேட்டில் ஈடுபட்ட 26,442 ஐஆா்சிடிசி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயா்மட்ட அளவில் குற்றச்செயலில் ஈடுபட்ட கும்பல்கள் கலைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

நடவடிக்கை: எதிா்வரும் காலங்களில் பயணச்சீட்டு முன்பதிவை கண்காணிக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், ஒரு ஐபி முகவரியிலிருந்து அல்லது விபிஎன் பயன்படுத்தி பல முன்பதிவு செய்யும் நபா்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கிறோம். முன்பதிவு மையங்களில் ஒரே நபா் அதிக பயணச்சீட்டு பெறுவதைத் தவிா்க்க கைரேகை முறை (பயோமெட்ரிக் முறை) கொண்டுவரப்படும். பயணச்சீட்டுகள் அனைத்தும் மேகக் கணிமை (ஃக்ளவுட் கம்ப்யூட்டிங்) முறையில் சேமிக்கப்படும். இந்த தரவுகள் மூலம் குற்றச்செயல்கள் நடைபெற்ற வழிகள் கண்டறிந்து தடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.