வெளிநாடுகளுக்குச் சென்றுவந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு: ஓவைசி பங்கேற்கவில்லை!
எம்.பி.க்களுடன் சந்திப்பு: பிரதமர் மோடியைச் சந்திப்பதை தவிர்த்த ஓவைசி!
புது தில்லி: ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று(ஜூன் 10) பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார்.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்துவருவதை அம்பலப்படுத்தி, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை விளக்கும் நோக்கில், எம்.பிக்கள் குழுக்கள் 33 நாடுகளுக்குச் சென்றன. அங்கு அந்த நாட்டு மூத்த அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து விளக்கி இந்தியாவுக்கு ஆதரவு பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுக்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், எம்.பி.க்கள் குழுக்களில் இடம்பெற்றிருந்த ஓவைசி பிரதமர் மோடியை சந்திப்பதை தவிர்த்துவிட்டார். தாம் துபைக்கு நெருங்கிய உறவினரின் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றிருந்ததால் இந்த கூட்டத்தில் கலந்துகொள்விலை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.