விமான விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!
விமான விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலியானதாகத் தகவல்.
குஜராத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், கடுமையாக சேதமடைந்த விடுதியில் இருந்த ஐந்து மருத்துவ மாணவர்கள் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதியில் தங்கியிருந்த சுமார் 20 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
விமானம் விழுந்தபோது, கட்டடமும் தீப்பற்றி எரிந்ததாகவும், இதனால், அதில் இருந்த மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து கவலை ஏற்பட்ட நிலையில், முதற்கட்டமாக, விடுதியில் தங்கியிருந்த 5 மாணவர்கள் பலியானதாகக் கூறப்படுகிறது. அவர்களது அடையாளங்கள் தெரியவில்லை.
Advertisement
Advertisement
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி, மெகானி என்ற பகுதியில் இயங்கி வந்துள்ளது. இந்தக் கட்டடத்தின் மீதுதான், ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டடத்தில் இருந்த சிலர் பலியானதாகவும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், 5 பேர் பலியாகிவிட்டதாகவும் மாணவர் விடுதியில் இருந்த 20 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், இன்று பகல் 1.44 மணிக்கு தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானத்தில் விமானிகள், ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்த நிலையில், இதுவரை 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் விவரங்கள வெளியாகியிருக்கிறது.
இதில், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் 19 முதல் 20 வயதுடைய இளைஞர்களாக இருப்பதால் அவர்கள் பெரும்பாலும், மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தவர்களாக இருப்பர் என்றும் கருதப்படுகிறது.
மருத்துவர்களின் விடுதி மீது விழுந்த விமானத்தால் விடுதி கட்டடத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. விமானம் கட்டடத்தின் மீது விழுந்தபோது, மருத்துவர்கள் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த கட்டடத்தில் மாணவர்களுக்கான உணவகம் இயங்கி வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.