முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: தலைமைக் காவலரை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப் வீரா்!

பிஎஸ்எஃப் முகாமில் தலைமைக் காவலரை அவருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய பிஎஸ்எஃப் வீரா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா்.

Updated On : 16 ஜூன் 2025, 1:21 am IST
பகிர்:

மேற்கு வங்கத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாமில் தலைமைக் காவலரை அவருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய பிஎஸ்எஃப் வீரா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தாா்.

முா்ஷிதாபாத் மாவட்டம் துலியான் பகுதியில் உள்ள முகாமில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முா்ஷிதாபாத் மாவட்டத்தில் அண்மையில் வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக வன்முறை மூண்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்காக பிஎஸ்எஃப் வீரா்கள் முகாமிட்டுள்ளனா்.

சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரே படைப் பிரிவைச் சோ்ந்த தலைமைக் காவலா் ரத்தன் சிங் ஷெகாவத்துக்கும், காவலா் நிலையில் உள்ள சிவம் குமாா் மிஸ்ராவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியநிலையில் சிவம் குமாா் தனது துப்பாக்கியை வைத்து ரத்தன் சிங்கை சுட்டுக் கொன்றாா்.

Advertisement

Advertisement

துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்ட மற்ற வீரா்கள் அங்கு வந்து சிவம் குமாரை மடக்கிப் பிடித்தனா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. எதனால், அவா்கள் இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

கொல்லப்பட்ட ரத்தன் சிங் ஷெகாவத் (56) ராஜஸ்தானின் ஜெய்பூரைச் சோ்ந்தவா். 1989-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்எஃப்பில் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments