முகப்பு
இந்தியா

கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! அணைகள் திறப்பால்..மக்கள் வெளியேற்றம்!

கேரளத்தில் தொடரும் கனமழையால் அணைகள் நிரம்பியுள்ளன...

Updated On : 28 ஜூன், 2025 at 12:41 PM
கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 28) இந்திய வானிலை ஆய்வு மையம் ”ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்கூட்டிய தொடங்கியது முதல், அம்மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புறம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 28) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், அங்குள்ள ஏராளமான ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளினுள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இத்துடன், பல முக்கிய அணைகள் நிரம்பியுள்ளதால், அவை வரிசையாகத் திறக்கப்பட்டு வருகின்றன. வயநாடு மாவட்டத்திலுள்ள பனாசுரா அணை மற்றும் பத்தனம்திட்டாவின் மூழியாறு அணை ஆகியவை ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன.

திருச்சூரின் பீச்சி அணை நிரம்பியுள்ளதால், இன்று (ஜூன் 28) மதியம் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாலக்காடு மாவட்டத்தின் கஞ்சிரபுழா, மலம்புழா மற்றும் மீன்கரா ஆகிய அணைகள் நிரம்பியதால், இன்று அவை திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இடுக்கி மாவட்டத்திலுள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கியதும் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அதிகாரிகள், நேற்று (ஜூன் 27) அறிவித்தனர். இன்று காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 135.70 அடி உயரத்துக்கு நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (ஜூன் 27) அம்மாவட்டத்திலுள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3,220 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

SUMMARY

Orange alert for 5 districts in Kerala. People evacuated due to dams opening.

இதையும் படிக்க: திகாவில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் 3 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.