ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரா சுவாமி கோயில் உள்ளது. பிரபலமான இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
ஏகாதசியையொட்டி ஆந்திரம் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அதிகமாக வரத் தொடங்கியதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்துள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதுதொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா கோியிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தேவுதானி ஏகாதசி: அயோத்தியில் பக்தர்கள் புனித யாத்திரை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.