தில்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!
தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு பற்றி..
தில்லி செங்கோட்டை அருகே சாலையில் சென்ற கார் நேற்று மாலை பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
வெடிவிபத்து ஏற்பட்ட "ஹுண்டாய் ஐ-20' காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இது பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் மெதுவாக சென்ற கார் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்தக் காரில் பயணிகள் இருந்ததாகவும், கார் வெடித்ததில் அருகில் இருந்த வாகனங்களும் கடும் சேதமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று இரவு 7.29 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆறு கார்கள், இரண்டு ரிக்ஷாக்கள், ஒரு ஆட்டோவும் தீயில் எரிந்து நாசமாகியதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்த சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தில்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து தலைநகர் தில்லி உள்பட நாடு முழுவதும் உச்சபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கார் விபத்துக்கான காரணத்தை போலீஸார் உள்படதேசிய முகமை ஆகியோர் விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.