சகோதரிகளின் மார்ஃபிங் புகைப்படங்களை அனுப்பி மிரட்டல்: தம்பி தற்கொலை!
சகோதரிகளின் மார்ஃபிங் புகைப்படங்களை அனுப்பி மிரட்டியதால் தம்பி தற்கொலை...
ஹரியாணாவில் சகோதரிகளின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து அனுப்பி மிரட்டியதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா ஃபரிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பாரதி. இவர் அங்குள்ள கல்லூரியில் இளநிலை 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
அண்மையில் இவரது போனுக்கு ஒரு தெரியாத எண்ணில் இருந்து சில புகைப்படங்கள் வந்துள்ளன. அது அவருடைய 3 சகோதரிகளின் ஆபாசப் புகைப்படங்கள். பின்னர் அந்த எண்ணில் இருந்து போன் அழைப்பு வந்துள்ளது. ரூ.20,000 தரவில்லை என்றால் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
செய்யறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்பதை அறியாத ராகுல், ஒரு சில நாள்கள் யாரிடமும் பேசாமல் சாப்பிடாமல் இருந்துள்ளார்.
பின்னர் ஒருநாள் மனமுடைந்து தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக ராகுலின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளதன்பேரில் போலீசார், ராகுலின் நண்பர் நீரஜ் உள்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாகவே ராகுலுக்கு சாஹில் என்பவரிடமிருந்து மிரட்டல் வந்ததாகவும் ராகுல் மற்றும் அவரது சகோதரிகளின் மார்ஃபிங் புகைப்படங்கள் வாட்ஸ்ஆப்பில் வந்ததாகவும் அவரது தந்தை மனோஜ் தெரிவித்தார். மனோஜுக்கு ராகுல் இளைய மகன். மூத்த சகோதர்களில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இறப்பதற்கு முன்பு ராகுல் கடைசியாக அவரது நண்பர் நீரஜிடம் பேசியுள்ளதாகவும் நீரஜுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்று ராகுலின் தந்தை போலீசில் தெரிவித்துள்ளார்.