முகப்பு
இந்தியா

பிரதமரின் மணிப்பூர் விசிட் 3 மணி நேரம்தானா?

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி...

Updated On : 7 செப்டம்பர், 2025 at 10:04 AM
பிரதமர் மோடி சாலைவலம்
பகிர்:

இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பாஜக வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரம் மூண்ட நிலையில், இன்னும் அங்கு இயல்புநிலை முழுமையாக திரும்பவில்லை. மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் பதவி விலகினாா். இதையடுத்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

இந்த நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு கலவரம் ஏற்பட்ட பின் முதல் முறையாக பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப். 13-இல் மிஸோரம் மாநிலத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அதனைத்தொடர்ந்து, மணிப்பூருக்குச் செல்லவிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பிரதமர் மணிப்பூர் செல்லும் திட்டம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆயினும், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முன்னதாக, அதே நாளில் முதலில் அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதனைத்தொடர்ந்து, அவர் ஹெலிகாப்டர் மூலம் மிஸோரத்துக்கும், தொடர்ந்து மணிப்பூருக்கும் வான் வழியாக செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது.

மணிப்பூரில் சூரசந்த்பூரில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்று பாஜக தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் அவர் பிற்பகலில் இம்பால் செல்கிறார்.

சரியாகச் சொல்ல வேண்டுமானால், ‘செப். 13’ ஒரே நாளில் குவாஹாட்டியிலிருந்து புறப்பட்டு காலை 10.30 மணியளவில் மிஸோரத்திற்குச் சென்றிறங்கும் மோடி, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, பகல் 12 மணிளவில் சூரசந்த்பூர்(மணிப்பூர்) செல்கிறார். அங்கிருந்து பகல் 1.30 மணியளவில் இம்பால்(மணிப்பூர்) செல்கிறார்.

அங்கு நடைபெறும் இகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு இம்பால் விமான நிலையத்திலிருந்து பகல் 2.30 மணிக்கு குவாஹாட்டிக்கு புறப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

ஆக, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிப்பூருக்குச் செல்லும் பிரதமர் மோடி 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே மணிப்பூரில் தங்கியிருப்பார் என்ற தகவல் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கும் பொதுவெளியில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.

இதனிடையே, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபுக்கு பிரதமர் நரேந்திர மோடி செப். 9 செல்கிறார். அங்கு வெள்ள பாதிப்புகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

PM Modi’s ‘rushed trip’ to Manipur: Modi's likely '3-hour' visit to Manipur

முழு கட்டுரையைப் படிக்க →