இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!
இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் சிறுமி அழைத்து வரப்பட்டார்.
கொச்சி: கேரள மாநிலத்தில் சாலை விபத்தில் இறந்த இளைஞரின் இதயம், 13 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
அறுவைசிகிச்சை நடக்கும் கொச்சி தனியார் மருத்துவமனைக்கு, சிறுமி, கொல்லத்திலிருந்து வந்தே பாரத் ரயிலில் அழைத்து வரப்பட்டுள்ளார்.
மல்லுசேரி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பில்ஜித், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வந்தனர்.
இதையடுத்து, இதய நோயால் பாதித்து மாற்று இதயத்துக்காகக் காத்திருந்த 13 வயது சிறுமியின் குடும்பத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்.
சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு இதயம் சாலை வழியாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, 1.25 மணிக்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சைத் தொடங்கி 3.30 மணிக்கு முடிந்தது. முழு அறுவை சிகிச்சை நடைமுறைகளும் முடிய சனிக்கிழமை காலை 6 மணி வரை ஆனதாகவும், சிறுமியின் உடலுக்குள் பொருத்தப்பட்ட இதயம் துடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த 48 மணி நேரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.