வங்கிக் கணக்கு என்பது ஆடம்பரம் என்ற நிலை மாறி அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், தற்போது சைபர் அச்சுறுத்தல்களால், இரண்டு வங்கிக் கணக்கு என்பது அடிப்படையாகியிருக்கிறது.
பெரும்பாலும், சைபர் அச்சுறுத்தல்களைப் பற்றி போதுமான விழிப்புணர்வு இருந்தாலும்கூட, பலரும், ஒரே ஒரு வங்கிக் கணக்கு மூலமாகவே அனைத்துப் பணப்பரிமாற்றங்களையும் மேற்கொள்கிறோம். இது பற்றிய உண்மையான அச்சுறுத்தல்களை அறிந்துகொள்ளாமல்.
எதற்கு இரண்டு வங்கிக் கணக்குகள்? ஒரு வங்கிக் கணக்குக்கு மாத ஊதியம் வருகிறது, அதிலிருந்து செலவு செய்கிறோம். அவ்வளவுதானே என்று நினைத்தால், அது அவ்வளவு எளிதான வேலையாக இருக்கலாமே தவிர, பாதுகாப்பான வேலை அல்ல என்கிறார்கள் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்.
ஒரே வங்கிக் கணக்கில் மொத்த மாத வருவாயையும் வைத்துக் கொண்டு, அதிலிருந்தே சிறு சிறு பணப்பரிமாற்றங்களையும் செய்வது ஆபத்து என்கிறது சைபர் பாதுகாப்புத் தரவுகள்.
ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் சிறு தொகையாக இருந்தாலும் அது அவர்களுக்கு மிக முக்கியம்தானே. அதனை அபாயத்தில் வைப்பதா?
சரி, மாதம் வருவாயை முழுக்க முழுக்க செலவு செய்வதாக இருந்தாலும், அதனை கண்காணிக்க ஒரு வங்கிக் கணக்கு இருப்பது நல்லது.
ஆன்லைனில் பொருள்கள் வாங்க, மாதக் கட்டணங்களை செலுத்த, ரீசார்ஜ் என அனைத்தையும் ஒரே முக்கிய வங்கிக் கணக்கில் இருந்து செய்யாதீர்கள்.
ஏதேனும் ஓரிடத்தில் வங்கிக் கணக்கின் விவரங்கள் திருடப்பட்டாலும் அவ்வளவுதான்.
தவறுதலாக ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டாலும் தனிநபருக்கு பிரச்னை.
ஒருவேளை, ஒரே வங்கிக் கணக்கு வைத்து, அதில் மாதாந்திர செலவுத் தொகை, ஆபத்துக் கால சேமிப்புத் தொகை, நீண்ட கால சேமிப்புத் தொகை என அனைத்தையும் வைத்திருந்து, அந்த வங்கிக் கணக்கின் விவரங்கள் திருடப்பட்டால், இழக்கும் தொகை பெரிது, பணத்தை மீட்டெடுக்க கால விரயம் என இழப்பு பலமாக இருக்கும்.
எனவே, வருவாய் வரும் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு தேவையான தொகையை மட்டும் அனுப்பிவிட்டு, அதிலிருந்து பணத்தை செலவிடுவது நல்லது.
அதாவது, முதலாம் வங்கிக் கணக்கின் விவரங்கள் எங்கேயும் வெளியே பயன்படுத்தாமல் இருப்பது பாதுகாப்பானது.
இரண்டாவது வங்கிக் கணக்கை முழுக்க முழுக்க அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது மற்றும் அதில் மிகச் சிறிய தொகை வைப்பில் இருப்பது அபாயத்தைக் குறைக்கலாம் என்கிறார்கள்.
எனவே, குறைந்த இருப்பு அல்லது குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியமில்லாத வங்கிகளில் ஒரே நாளில் வங்கிக் கணக்கைத் தொடங்கும் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அவற்றைப் பயன்படுத்தி உடனடியாக இரண்டாவது வங்கிக் கணக்கைத் தொடங்கி, முதல் மற்றும் முக்கிய வங்கிக் கணக்கைப் பாதுகாப்பாக வையுங்கள். நலம்.
அச்சுறுத்தும் குறுந்தகவல்களும் லிங்குகளும்
மின் கட்டணத்தை செலுத்தவில்லை, இணைப்பு துண்டிக்கப்படும், உடனடியாக மின் கட்டணம் செலுத்த இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்பது முதல், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்பது வரை ஏராளமான குறுந்தகவல்கள் வந்து அச்சுறுத்தும். எந்தக் காரணம் கொண்டும் லிங்குகளை தொடக்கூடாது.
செல்போன் அழைப்புகளில் நாம் பேசும்போதுகூட, நமது செல்போனை அவர்களது கட்டுப்பாட்டில் எடுக்கும் ஆபத்து இருக்கிறது என்பதால், தவறான அழைப்புகள் என்று தெரிந்ததும் செல்போனை துண்டித்துவிடுங்கள்.
முன்பின் தெரியாதவர்கள், விடியோ காலில் அழைத்தால், அந்த எண்களில் வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம்.
சைபர் அரஸ்ட் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். எனவே, அவ்வாறு யாரேனும் மிரட்டினால் உடனடியாக காவல்துறை உதவியை நாடலாம்.
ஏதேனும் வாடிக்கையாளர் சேவை மைய எண்களை தேடும்போது, நாம் கிளிக் செய்யும் இணையதளம் உண்மையான சேவை மையம்தானா என்பதை உறுதி செய்து கொள்வது நலம்.
இதையும் படிக்க... 140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.