பஹல்காம் தாக்குதல்: பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட புது அறிக்கை!
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு கடும் கண்டனம்!
பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பிரிக்ஸ் கூட்டமைப்பின் அறிக்கை வெளியாகியுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா (பிரிக்ஸ்) ஆகிய 5 முதன்மை நாடுகளுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய கூடுதல் உறுப்பு நாடுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், நியூயார்க்கில் பிர்க்ஸ் கூட்டமைப்பு உறுப்பினராக உள்ள நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் உறுப்பினர் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அதன்பின், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பிரிக்ஸ் கூட்டமைப்பின் அறிக்கை வெளியானது. அதில், ‘2025 ஏப்ரல் 25-இல் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை ‘பிரிக்ஸ்’ கடுமையாகக் கண்டிக்கின்றது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.
Advertisement
எல்லை கடந்த பயங்கரவாதச் செயல்கள், பயங்கரவாதத்திற்கான நிதியுதவி உள்பட அனைத்து வடிவங்களிலுமான பயங்கரவாதத்தை முழு திறனுடன் எதிர்கொள்வதை பிரிக்ஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. பயங்கரவாதத்தை எந்தளவிலும் சகித்துக்கொள்ள முடியாது என்பதிலும் அதில் இரட்டை நிலைப்பாடு கிடையாது என்பதையும் வலியுறுத்துகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.