ஈரானில் இருந்து ஆர்மீனியா, அஜர்பைஜான் வழியாக நாடு திரும்பிய 1,200 இந்தியர்கள்!
ஈரானில் இருந்து ஆர்மீனியா, அஜர்பைஜான் வழியாக 1,200 இந்தியர்கள் நாடு திரும்பியதாக மத்திய அரசு அறிவித்துள்ளது...
ஈரான் நாட்டில் சிக்கியிருந்த சுமார் 1,200 இந்தியர்கள் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளின் வழியாகத் தாயகம் அழைத்து வரப்பட்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் போர் வெடித்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நாடுகளின் வான்வழிப் பாதைகள் மூடப்பட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போரால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஈரானில் இருந்து 845 மாணவர்கள் உள்பட சுமார் 1,200 இந்தியர்கள் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“845 மாணவர்கள் உள்பட 1200 இந்தியர்கள் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதில், 996 பேர் ஆர்மீனியாவுக்கும், 204 பேர் அஜர்பைஜான் நாட்டுக்கும் சென்றனர். அங்கிருந்து அவர்கள் இந்தியா வருவதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் உதவி செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த பிப். 28 ஆம் தேதி முதல் 6,24,000-க்கும் அதிகமான பயணிகள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.