வடகிழக்கு பகுதிகளுக்கு எந்தவொரு அரசும் இந்தளவுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை: அஸ்ஸாமில் அருணாசல முதல்வர் பிரசாரம்!
அஸ்ஸாம் அரசியல் களம்: அருணாசல பிரதேச முதல்வர் பிரசாரம்! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக அருணாசல முதல்வர் பிரசாரம்!
குவாஹாட்டி : அஸ்ஸாம் அரசியல் களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவாக அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு இன்று (ஏப். 4) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏப். 9-இல் அம்மாநிலத்தில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அங்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதன் அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தில் இருந்து அஸ்ஸாமுக்குச் சென்ற அருணாசல முதல்வர் பெமா காண்டு அங்குள்ள லகிம்பூர், ரங்கநாடி, நௌபாய்ச்சா (தனி) பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களின் ஆதரவை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காகத் திரட்டினார்.
Advertisement
இதனைத்தொடர்ந்து, அவர் தமது எக்ஸ் பக்கத்தில், ‘வாக்காளர்களின் ஆதரவு தங்கள் அணிக்கு அமோகமாக வீசுதவை தேர்தல் பிரசார களத்தில் பார்க்க முடிந்ததாக’ குறிப்பிட்டுள்ளார். மேலும், “அருணாசல பிரதேசத்தின் வளர்ச்சியானது அஸ்ஸாமைச் சார்ந்த கடின உழைப்பாளிகளின் ஆற்றலால் விளைந்திருக்கிறது. ஆகவே, அவர்களின் நலனில் நாங்கள் முழுமையாக எங்களை அர்ப்பணித்துள்ளோம்.
மக்கள் என்டிஏ-வை மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஆட்சியில் அமர்த்த தயாராகிவிட்டனர். நெடுங்காலமாக நீடிக்கும் அஸ்ஸாம்-அருணாசல் எல்லை விவகாரங்களில் அமைதிக்கும் பங்களிப்புக்கும் இரட்டை என்ஜின் அரசால் வழி வித்திடப்பட்டுள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால், நாங்கள் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, வளமை ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.
வடகிழக்கும் அஸ்ஸாமும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ஆகியோரின் தொலைநோக்கு பார்வையுடனான தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அடைந்து வருகின்றன. இந்தியாவின் அடுத்த செமிகண்டக்டர் முனையமாகவும் தொழில்நுட்பத்துக்கான உலகளாவிய மையமாகவும் உருவெடுக்க இப்போது அஸ்ஸாம் ஆற்றலுடன் மாறி வருகிறது.
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி அஸ்ஸாமுக்கு 40-க்கும் மேற்பட்ட முறை வருகை தந்துள்ளார். வடகிழக்குக்கு 75-க்கும் மேற்பட்ட முறையும் வந்திருக்கிறார். வெறுமனே, எண்ணிக்கை கணக்கல்ல, இது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
வடகிழக்குக்கு இந்தளவுக்கு கவனத்தையும் அக்கறையையும் முன்னுரிமையையும் இதற்கு முன் இருந்த எந்தவொரு அரசும் கொடுத்ததில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.