ரயில் தண்டவாளங்களில் 18,000 டன் குப்பைகள் அகற்றம்: எம்சிடி தகவல்
தலைநகரில் உள்ள தண்டவாளங்களில் தில்லி மாநகராட்சி மேற்கொண்ட சிறப்பு தூய்மை இயக்கத்தின் மூலம் இதுவரை 18,495 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தலைநகரில் உள்ள தண்டவாளங்களில் தில்லி மாநகராட்சி மேற்கொண்ட சிறப்பு தூய்மை இயக்கத்தின் மூலம் இதுவரை 18,495 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தலைநகரில் மொத்தம் 102.9 கீ.மீ. நீளமுள்ள ரயில் தண்டவாளங்களில் குப்பைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 49.74 கி.மீ. தூரத்துக்கான தூய்மை பணிகள் நிறைவடைந்துள்ளன. ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 123 இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுவரை 18,495 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் கரோல் பாக் மற்றும் கேஷவ்புரம் பகுதிகளில் அதிகப்படியாக 4,100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் 550 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு டிப்பா் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டன.
Advertisement
கரோல் பாக் பகுதியில் பெருமளவு குப்பைகளை வெளியேற்ற 20 ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மீண்டும் புதிதாக குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க ரயில்வே ஓரங்களில் 61 இரட்டை குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
‘இந்த இயக்கம் பழைய குப்பை தேக்கங்களை அகற்றுவது மட்டுமின்றி, நீண்டகால தூய்மையை உறுதி செய்ய சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறது’ என தில்லி மாநகராட்சி ஆணையா் சஞ்சீவ் கிா்வாா் தெரிவித்தாா்.