படிப்பறிவில்லாத குஜராத் மக்கள்: கார்கே வருத்தம்!
குஜராத் மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் எனக் கூறியதற்கு மன்னிப்புகோரிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம்
குஜராத் மக்கள் படிப்பறிவில்லாதவர்கள் எனக் கூறியதற்கு மன்னிப்புகோரிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்தார்.
கேரளத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது, குஜராத் மக்களை படிப்பறிவில்லாதவர்கள் என கார்கே பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தன்னுடைய கருத்துகளுக்கு கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், "கேரளத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் உரையில் நான் கூறிய சில கருத்துகள் வேண்டுமென்றே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன.
Advertisement
இருப்பினும், அதற்காக நான் எனது மனமுவந்து வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குஜராத் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவ்து எனது நோக்கமல்ல. அவர்கள் மீது எப்போதும் நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்; எப்போதும் வைத்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இடுக்கியில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் கார்கே பேசுகையில், "கேரள மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். நன்கு படித்தவர்கள். மோடிஜியும், பினராயி விஜயனும் குஜராத் அல்லது மற்ற இடங்களிலுள்ள படிப்பறிவில்லாத மக்களை முட்டாளாக்கலாம். ஆனால், கேரள மக்களை முட்டாளாக்க முடியாது" என்று தெரிவித்திருந்தார்.
கார்கேவின் இந்தப் பேச்சு, குஜராத்தில் பரவலான எதிர்ப்பைப் பெற்றதுடன், பல்வேறு தரப்பினர் கண்டனங்களும் தெரிவித்தனர்.
மேலும், குஜராத்தில் இம்மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.