பயங்கரவாதி பிரதமர் மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!
பிரதமர் மோடியை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் கெடு
பிரதமர் நரேந்திர மோடியை பயங்கரவாதி எனக் குறிப்பிட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சென்னைக்கு வருகைதந்த காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, செய்தியாளர்களுடன் பேசுகையில், "அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, அவர்கள் (அதிமுக) எப்படி பிரதமர் மோடியுடன் கைகோக்க முடியும்?
அவர் ஒரு பயங்கரவாதி. அவர் சமத்துவம் மற்றும் நீதியை நம்புவதில்லை. அவரது கட்சியும் சமத்துவத்தை நம்புவதில்லை. அவர்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார்கள்.
Advertisement
அவர்கள் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கருணாநிதி போன்ற திராவிட தலைவர்களின் கொள்கையை பலவீனப்படுத்துகிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியை பயங்கரவாதி என கார்கே பேசியது, பாஜக தலைவர்களிடையே பெரும் எதிர்ப்புகளைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து, தனது கருத்து சர்ச்சையாகிய நிலையில், "மோடி எப்போதும் மிரட்டுகிறார் என்பதையே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவை அவரின் கைகளில் உள்ளன.
அவற்றை வைத்துக்கொண்டு, மக்களையும் அரசியல் கட்சிகளையும் அவர் அச்சுறுத்துவதாகக் கூறினேன்.
ஆனால், நான் கூறியவற்றை பாஜக திரித்து, பரப்பி வருகிறது" என்று கார்கே விளக்கமும் அளித்தார்.
இந்த நிலையில், பிரதமரை பயங்கரவாதி எனக் கூறியதற்கு 24 மணிநேரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.