பாசிச அரசிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவே மக்கள் வாக்களிக்கின்றனர்: அகில் கோகோய்
சிவசாகர் தொகுதியில் போட்டியிடும் அகில் கோகோய் வாக்களித்தார்.
பாசிச பா.ஜ.க. அரசிடமிருந்து ஜனநாயகத்தைக் காப்பதற்காகவே அஸ்ஸாம் மக்கள் வாக்களித்து வருவதாக ரைஜோர் தள் கட்சியின் தலைவர் அகில் கோகோய் தெரிவித்தார்.
சிவசாகர் தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடும் அகில் கோகோய் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே மக்கள் பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்குத் திரண்டு வருகின்றனர். நாம் ஜனநாயக விரோத அரசை எதிர்கொண்டிருக்கிறோம். இது ஒரு பாசிச அரசு.
Advertisement
முதல்வர் ஒரு பாசிசவாதி. பாஜக தனது ஆட்சிக்காலத்தில் பல இழிவான செயல்களைச் செய்துள்ளது. இம்முறை, எதிர்க்கட்சிகள் எளிதாக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிவசாகர் தொகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என ரைஜோர் தள் தலைவர் அகில் கோகோய் உறுதியளித்தார்.
சிவசாகர் தொகுதியில் மற்ற இரண்டு என்டிஏ வேட்பாளர்களுடன் அகில் கோகோய் மும்முனைப் போட்டியைச் சந்தித்து வருகிறார்.
இத்தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குஷால் டோவாரி நிறுத்தப்பட்டுள்ளார். அதேவேளையில், அதன் கூட்டணிக் கட்சியான அம்ஜூரி உறுப்பினர் பிரதீப் ஹசாரிகாவை சிவசாகர் தொகுதியில் வேட்பாளராக அறிவித்துள்ளது.
மொத்தம் 126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 722 வேட்பாளர்களின் தேர்தல் விதியைத் தீர்மானிக்கும் வகையிலான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தேர்தலில், ஆளும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது; அதேசமயம், 2016-ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைப்புக் காட்டி வருகிறது.