அச்சமற்ற புதிய அஸ்ஸாம் உருவாகும்: கௌரவ் கோகோய்!
காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் தனது வாக்கைச் செலுத்தினார்.
அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் தனது வாக்கைச் செலுத்தினார்.
722 வேட்பாளர்களின் தேர்தல் விதியைத் தீர்மானிக்கும், அஸ்ஸாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.
ஜோரஹாட்டில் தனது தாயார் டோலி கோகோயுடன் இணைந்து கௌரவ் கோகோய் வாக்களித்தார்.
Advertisement
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசு, அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும். இன்று அஸ்ஸாம் மாநிலத்திற்கு ஒரு முக்கியமான நாள்.
அஸ்ஸாமின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மக்கள் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கப் போகிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு வலிமையான, அச்சமற்ற, நம்பிக்கையான புதிய அஸ்ஸாம் உருவாகும்.
மாநில வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில் வெளியே வந்து, தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தங்கள் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில், 2016-ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகிறது.