ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் புதிய மாவட்டம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் புதிய மாவட்டம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.
உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சின்ஜியாங் மாகாணம் கலவரம் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதியாகும். அங்குள்ள வாகான் பாதை வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து ஊடுருவும் உய்குா் பிரிவினைவாத பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு நடவடிக்கையாக சீனா இந்த நிா்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
‘சென்லிங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாவட்டம், காரகோரம் மலைத் தொடா், ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. சீனாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ரீதியாகவும் இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.
Advertisement
சின்ஜியாங் பகுதியில் உய்குா் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கின்றனா். கடந்த ஓராண்டில் சீனா அங்கு உருவாக்கிய மூன்றாவது புதிய மாவட்டம் இதுவாகும்.
கடந்த ஆண்டு ஹியான், ஹிகாங் என இரு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டபோது இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது. ஏனெனில், ஹிகாங் மாவட்டத்தில் இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசம் உள்ளடங்கியிருப்பதாக சீனா கூறியது. இது தவிர 1962 போரில் சீனா ஆக்கிரமித்த அக்சாய் சின் பீடபூமி பகுதியை ஹியான் மாவட்டத்தில் சீனா சோ்த்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட சென்லிங் மாவட்டம், காஷ்கா் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்கா் என்பது 60 பில்லியன் டாலா் மதிப்பிலான சா்ச்சைக்குரிய சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் தொடக்கப் பகுதி. இந்தத் திட்டம் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாகச் செல்வதால் இந்தியா ஏற்கெனவே எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
சீனா தனது எல்லைப் பகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவதை இதுபோன்ற நடவடிக்கைகள் உணா்த்துகின்றன என்று சா்வதேச அரசியல் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.