மகளிர் இடஒதுக்கீடு: நாட்டிலேயே சத்தீஸ்கரில் அதிக பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள்!
மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், சத்தீஸ்கரில் அதிக பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட உள்ள நிலையில், நாட்டிலேயே சத்தீஸ்கரில் அதிக பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதிவாகியுள்ளனர்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 283 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கைப் பெண்களுக்கு ஒதுக்குவதற்காக, 2023 செப்டம்பர் 19 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா மூலம் கொண்டுவரப்பட்ட 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
Advertisement
இதையொட்டி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.
இந்த இடஒதுக்கீடு எப்படி, எப்பொழுது அமல்படுத்தப்பட உள்ளது என்று தேசியளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு ஒரு முன் உதாரணமாக சத்தீஸ்கர் மாநிலம் திகழ்கிறது.
மொத்தமாக 90 தொகுதிகள் உள்ள மாநிலத்தில் 21 சதவீதம் மகளிர் உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் நாட்டிலேயே சத்தீஸ்கர் மாநிலம்தான் அதிக பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2003-இல் நடைபெற்ற மாநிலத்தின் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2018-இல் 16 உறுப்பினர்களாகவும், 2023-இல் 19 உறுப்பினர்களாகவும் பெண்களின் செல்வாக்கு அதிகமாகின.
மேலும், சத்தீஸ்கரின் 11 மக்களவை உறுப்பினர்களுள் ஏறத்தாழ 27 சதவீதம் அதாவது 3 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சத்தீஸ்கரில் காணப்படும் இந்தத் தொடர்ச்சியான ஏற்றம், மத்திய அரசின் மகளிர் இடஒதுக்கீடு மசோதா முன்னுதாரணமாக அமைகிறது.