ஹோர்முஸ் நீரிணை வழியே தடையற்ற போக்குவரத்து: ஐ. நா. அவையில் இந்தியா வலியுறுத்தல்!
சரக்கு கப்பல்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது: ஐ. நா. பொது விவாதத்தில் இந்தியா
சரக்கு கப்பல்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது என்ற தமது நிலைப்பாட்டை ஐ. நா. அவையில் இந்தியா மீண்டுமொருமுறை அழுத்தமாகப் பதிவு செய்தது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் கூட்டாக நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்வினையாக உலகின் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு மிக மிக முக்கியமான வழித்தடமாகத் திகழும் ஹோர்முஸ் நீரிணையை முடக்கி உலகப் பொருளாதாரத்தையே ஸ்தம்பிக்கச் செய்தது ஈரான்.
ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்டதன் எதிரொலியாக, ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் போக்குவரத்து சுமார் 95 சதவீதம் சரிவைச் சந்தித்தது. கடந்த பிப்ரவரியில் ஒருநாளைக்கு சுமார் 130 கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்த அவ்வழித்தடத்தில் கடந்த மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை வெறும் 6-ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வழித்தடத்தில் போக்குவரத்து முடக்கம் தொடர்ந்தால் பரந்தளவிலான பொருளாதார சிக்கல் ஏற்படும் என்று ஐ. நா. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு முகமை எச்சரித்துள்ளது.
Advertisement
இந்த நிலையில், ‘மத்திய கிழக்கு நிலவரம்’ பற்றிய விவாதம் ஐக்கிய நாடுகள் அவையில் வியாழக்கிழமை (ஏப். 16) நடைபெற்றது. அதில் ஐ. நா. வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான ஹரிஷ் பர்வதநேனி பேசும்போது, வணிக கப்பல்கள் குறிவைக்கப்பட்டு அதனால் அப்பாவி கப்பல் பணியாளர்களுக்கு ஆபத்து நேரிடுவதையும் ஹோர்முஸ் நீரிணையில் வணிகத்துக்கும் போக்குவரத்துக்குமான சுதந்திரம் தடைபடுவதையும் ஏற்கவே முடியாதென்ற இந்தியாவின் நிலைப்பட்டை மீண்டுமொருமுறை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
இந்தாண்டு பிப். 28-இல் ஈரானிலும் வளைகுடா பிராந்தியத்திலும் சண்டை தொடங்கியதிலிருந்து, அது குறித்து இந்தியா ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருப்பதுடன் அனைத்து நாடுகளையும் சண்டையைக் கைவிடவும் குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கவும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும் வலியுறுத்தியதுடன் அனைத்து நாடுகளின் இறையான்ண்மையையும் பிராந்திய ஒற்றுமைக்கு மதிப்பளிக்கவும் அழைப்பு விடுத்தது என்றார்.
மேலும், இந்திய மாலுமிகள் இந்தச் சண்டையில் உயிரிழந்ததைக் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்ததுடன், இவ்விவகாரத்தில் சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றார். அத்துடன், ஹோர்முஸ் நிரிணை வழியாக உலகளாவிய வணிகம் மற்றும் போக்குவரத்துக்கான தடையற்ற சுதந்திரம் நிலைத்திட இந்தியா அழுத்தமாக வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.