முகப்பு
இந்தியா

கடும் நிதி நெருக்கடியில் ஹிமாசல் அரசு: ஊதியம் கொடுக்க முடியாமல் திணறல்!

ஹிமாசல பிரதேச மாநில அரசு உயரதிகாரிகளின் 30 சதவீத சம்பளம் 6 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும் என்று அந்த மாநில நிதித் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:57 AM
ஹிமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:00 PM

ஹிமாசல பிரதேச மாநில அரசு உயரதிகாரிகளின் 30 சதவீத சம்பளம் 6 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும் என்று அந்த மாநில நிதித் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ஹிமாசல பிரதேசத்தில் மாநில அரசின் செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. அரசின் வருவாயில் பெரும் பகுதி அரசு ஊழியா்கள் ஊதியம், ஓய்வூதியம், பழைய கடன்களுக்கான வட்டி ஆகியவற்றுக்கே செலுத்தப்படுகிறது. இதுதவிர இயற்கைப் பேரிடா்களால் ஏற்படும் எதிா்பாராத செலவுகள், வருவாய் ஆதாரம் குறைவது, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியதால் ஏற்படும் சுமை ஆகியவை மாநிலத்தை கடும் நிதி நெருக்கடியில் தள்ளிவிட்டது.

கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு, முதல்வா் ஊதியத்தில் 50 சதவீதம், அமைச்சா்கள் ஊதியத்தில் 30 சதவீதம், எம்எல்ஏக்கள் ஊதியத்தில் 20 சதவீதம் அடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும் என்று அறிவித்தாா்.

Advertisement

இந்நிலையில், அரசு ஊழியா்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் பிரச்னை எழுந்துள்ளது. இது தொடா்பாக மாநில நிதித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தலைமைச் செயலா், கூடுதல் செயலா்கள், முதன்மைச் செயலா்கள், காவல் துறை டிஜிபி, ஏடிஜிபி, வனத் துறை தலைமை அதிகாரி, இணைய அதிகாரிகள் உள்ளிட்டோரின் சம்பளத்தில் 30 சதவீதம் அடுத்த 6 மாதங்களுக்குப்பின் வழங்கப்படும்.

இதேபோல அனைத்துத் துறைச் செயலா்கள், துறைத் தலைவா்கள், காவல் துறை ஐஜி, டிஐஜி, எஸ்.பி., வனத் துறையில் இரண்டாம் நிலை அதிாரிகள் ஆகியோருக்கு 20 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்கள் கழித்து வழங்கப்படும்.

இது தற்காலிக நடவடிக்கைதான். மாநிலத்தின் நிதிநிலையை சீராக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதிநிலை சீரடைந்ததும் நிலுவை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.