பஹல்காம் தாக்குதலைக் கண்டித்த ஐரோப்பிய ஒன்றியம்!
பஹல்காம் தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்தது குறித்து...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்ததோடு, அந்தக் கொடூரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இந்திய மக்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டது நாட்டையே பரபரப்பாக்கியது.
Advertisement
இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஓர் ஆண்டான நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது:
“பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு நாளில், ஓராண்டுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், ஐரோப்பிய ஒன்றியமும் அதன் 27 உறுப்பு நாடுகளும் இந்திய மக்களுடன் ஒற்றுமையாக நிற்கின்றன.
அவர்களுடைய குடும்பத்தினருடனும் இந்திய அதிகாரிகளுடனும் இணைந்து, நாங்கள் அவர்களின் நினைவைப் போற்றுகிறோம். ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.