தெலங்கானா மேலவை உறுப்பினராக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
அசாருதீன் அமைச்சராக நீடிப்பதில் சிக்கல் இல்லை! மாநில அரசு பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஒப்புதல்
ஹைதராபாத் : தெலங்கானாவில் மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது அசாருதீன் மாநில அரசில் அமைச்சராக நீடிப்பதில் சிக்கல் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் சனிக்கிழமை(ஏப். 25) தெரிவித்தன.
கடந்த 2023-இல் நடைபெற்ற தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வியடைந்தார். இதையடுத்து, ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினா்கள் பிரிவின்கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தெலங்கானா மேலவைக்கு அசாருதீன் பெயரை மாநில அரசு பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை ஏற்று அசாருதீனை மேலவை உறுப்பினராக ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா நியமிக்காமல் இருந்தார்.
இதனிடையே, மாநில அரசில் சிறுபான்மையினருக்கான நலத்துறை அமைச்சராக அசாருதீன் கடந்த அக்டோபரில் பதவியேற்றார். அதனையடுத்து 6 மாதங்களுக்குள் பேரவை அல்லது மேலவைக்கு உறுப்பினராக வேண்டும். அதற்கான கால அவகாசம் வரும் ஏப். 30-ஆம் தேதி முடிகிறது.
Advertisement
இந்நிலையில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் இப்போதைய ஆளுநர் சிவ பிரதாப் சுக்லாவைச் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்று ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினா்கள் பிரிவின்கீழ் தெலங்கானா மேலவைக்கு அசாருதீன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம். கோதண்டராம் ஆகியோரை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக தெலங்கானா ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.