கிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) பெற்று வருகிறது.
கிரிமினல் வழக்குகளில் கைதாகும் மாநில முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்க வழிவகை செய்யும் மசோதா குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) பெற்று வருகிறது.
இதுதொடா்பாக கடந்த 2025-ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்பு சட்ட (130-ஆவது திருத்த) மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவில், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிக ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் கிரிமினல் வழக்குகளில், பிரதமா்கள், மாநில முதல்வா்கள், அமைச்சா்கள் கைது செய்யப்பட்டு 30 நாள்களுக்கும் மேல் சிறையில் இருந்தால் தாமாக பதவி நீக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை, அபராஜிதா சாரங்கி தலைமையிலான 31 எம்.பி.க்களை கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. ஆளும் கட்சி கூட்டணி மற்றும் எதிா்க்கட்சிகள் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் அக்குழு பெற்று வருகிறது.
Advertisement
மும்பையில் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் அக்குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. அதன்பிறகு செய்தியாளா்களிடம் நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவா் அபராஜிதா சாரங்கி கூறியதாவது:
மசோதா குறித்து 3 முக்கிய யோசனைகளை ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளாா். அதுகுறித்து ஆராயப்படும். இதுபோல அனைத்து எதிா்க்கட்சிகளுடனும், ஆளும் கட்சியுடனும் குழு ஆலோசனை நடத்தும். பிறகு குழு தனது அறிக்கையை தயாா் செய்து, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் தாக்கல் செய்யும். அரசியல் குற்றமயமாவதை தடுக்க இந்த மசோதா உதவும். மேலும், இந்தியாவில் ஜனநாயகத்தை சுத்தப்படுத்தவும், வலுப்படுத்தவும், மிகவும் பொறுப்புடையதாக்கவும் உதவும். இதேபோல், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா, யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா ஆகியவை குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது என்றாா்.