சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி!
பிரதமர் நரேந்திர மோடி சிக்கிம் மாநிலச் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடினார்.
சிக்கிம் மாநிலத்துக்கு இருநாள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிறுவர்களுடன் கால்பந்து விளையாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி இருநாள் பயணமாக சிக்கிம் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள சிறுவர்களுடன் கால்பந்து விளையாடும் புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில், “சிக்கிம் கேங்டாக்கில் ஒரு அருமையான காலைப்பொழுதில் என் இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதைப் போன்று வேறெதுவும் இல்லை” என்றும், மற்றொரு பதிவில், “சிறுவர்களுடன் ஒரு உற்சாகமூட்டும் கால்பந்து ஆட்டம்” என்றும் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அதில், ரூ. 4,000 கோடிக்கும் மேலான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதுமட்டுமின்றி, ஆர்கிட் மலர்கள் வளர்க்கப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆர்கிட் பூங்காவான கேங்டாக் பகுதியில் உள்ள ஸ்வர்ணஜெயந்தி மைத்ரி மஞ்சரி பூங்காவைப் பார்வையிடவுள்ளார். இதனால், சிக்கிம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடி சிக்கிம் சென்றதும் கேங்டாக் நகரில் நேற்று (ஏப்ரல் 27) சாலைவலம் வந்தார்.
இந்தப் பயணம் கடந்தாண்டே திட்டமிடப்பட்ட நிலையில், அப்போது மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.