சிக்கன் சமைப்பதில் வாக்குவாதம்: கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!
கோழிக்கறி சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பற்றி..
தெலங்கானாவில் காமரெட்டி நகரில் கோழிக்கறி சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவரை மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு நிகழ்ந்தது. 28 வயதான பெண், பலசரக்கு விற்பனையாளராகப் பணிபுரிபவரைத் திருமண செய்திருந்தார். சம்பவ தினத்தன்று கணவர் கோழிக்கறி சமைக்கச்சொல்லியிருக்கிறார். ஆனால், அவரது மனைவி கோழிக்கறி சமைக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் கணவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
Advertisement
மதுபோதைக்கு அடிமையான அந்த நபர், தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், இதன் காரணமாகவே கணவன் - மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னைகள் தொடர்பாகத் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், இது தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.