பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை பாதுகாக்க முன்வரும் ஆனந்த் அம்பானி!
கொல்லப்பட்ட போதைப் பொருள் கடத்தல் தலைவர் பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை பாதுகாக்க ஆனந்த் அம்பானி விருப்பம்...
கொல்ம்பியா நாட்டைச் சேர்ந்த மறைந்த போதைப் பொருள் கடத்தல் தலைவர் பாப்லோ எஸ்கோபாருக்குச் சொந்தமான நீர்யானைகளைப் பாதுகாப்பதற்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார்.
கொல்ம்பியா நாட்டில், 1990-கள் வரை போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை இயக்கி வந்தவர் பாப்லோ எஸ்கோபார். இவர், ஹசியெண்டா நாப்போலஸ் எனும் தனக்குச் சொந்தமான பண்ணையில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரிய வகை உயிரினங்களை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து பராமரித்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 1993 ஆம் ஆண்டு பாப்லோ எஸ்கோபார் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர், அவருக்குச் சொந்தமான பண்ணைகள் பராமரிப்பின்றி கைவிடப்பட்டன. இதில், அந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நீர்யானைகள் கொல்ம்பியாவின் பிரதான நதியான மக்தலேனா பகுதியில் ஆயிரக்கணக்கில் பெருகியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதனால், மக்தலேனா நதியில் மீன்பிடிக்கும் மீனவர்களின் உயிருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் 800 நீர்யானைகளைக் கொல்லும் கொலம்பியா அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி பாப்லோ எஸ்கோபாரின் நீர்யானைகளை குஜராத்தில் உள்ள தனது வந்தாரா உயிரியல் பூங்காவில் வளர்த்து பராமரிக்க விரும்புவதாகக் கூறி கடந்த ஏப். 27 அன்று கொலம்பியா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இருப்பினும், ஆனந்த் அம்பானியின் விருப்பத்துக்கான கொலம்பியா அரசின் முடிவு குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் 3,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆனந்த் அம்பானியின் வந்தாரா உயிரியல் பூங்காவில் யானைகள், புலிகள் உள்பட 2,000-க்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.