சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!
தில்லியில் பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் என்எஸ்ஜி ஈடுபட்டது பற்றி...
நாட்டின் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அசம்பாவிதம் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை எதிா்கொள்ளும் வகையில், நகர காவல்துறையும் தேசிய பாதுகாப்புப் படையும் (என்எஸ்ஜி) இணைந்து ’சுதா்ஷன் சக்தி-5’ எனும் பிரமாண்ட கூட்டுப் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்டன.
இதையொட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிவரை 18 மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஒத்திகை நடைபெற்றது. இதுபோன்ற ஒத்திகை தலைநகரில் நடைபெறுவது இந்த ஆண்டில் இது ஐந்தாவது முறையாகும். இந்த ஒத்திகையில் மத்திய மற்றும் மாநில அளவிலான பல்வேறு பாதுகாப்பு முகமைகளும் பங்கேற்றன.
பயங்கரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தினால் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த கஷ்மீரி கேட் பேருந்து முனையம், கனாட் பிளேஸ், நேரு பிளேஸ், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், செங்கோட்டை மெட்ரோ நிலையம், கல்காஜி கோயில் உள்ளிட்ட இடங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதேபோல, ஒரே நேரத்தில் பல இடங்களில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு, பிணைக் கைதிகளை பிடித்து வைத்தல், விமான கடத்தல் மற்றும் ரசாயன அல்லது அணுஆயுத தாக்குதல்கள் போன்ற ஆபத்தான சூழல்கள் சித்தரிக்கப்பட்டு படைகளின் தயாா்நிலை ஆய்வு செய்யப்பட்டது.
இந்த பயிற்சியில் தில்லி காவல்துறையின் அதிவிரைவுப்படை (ஸ்வாட்), வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு, மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து இந்திய ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ), தில்லி மெட்ரோ (டிஎம்ஆா்சி), தீயணைப்பு மற்றும் மருத்துவத் துறையினரும் பெருமளவில் பங்கேற்றனா்.
Independence Day security - NSG conducts counter-terrorism drills at multiple locations
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.