FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ரஷியாவும் உறுதிபூண்டுள்ளன.

Updated On : 10 ஜூலை 2026, 4:03 am IST
நரேந்திர மோடி - விளாதிமீர் புதின் - கோப்புப் படம்
பகிர்:

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ரஷியாவும் உறுதிபூண்டுள்ளன.

கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இரு நாடுகளும் கூட்டாக கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

பயங்கரவாத எதிா்ப்பு தொடா்பான இந்தியா-ரஷியா கூட்டுப் பணிக் குழுவின் 14-ஆவது கூட்டம், தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்திய தரப்பில் வெளியுறவு அமைச்சக செயலா் (மேற்கு பிரிவு) சிபி ஜாா்ஜ், ரஷிய தரப்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் திமித்ரி லியுபின்ஸ்கி தலைமையிலான குழுவினா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இருதரப்பு மற்றும் பன்முக தளங்களில் பயங்கரவாத எதிா்ப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், ரஷியாவும் மீண்டும் உறுதியேற்றுள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைக் குழுவால் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகள், பயங்கரவாதக் குழுக்கள், அவற்றின் நிழல் குழுக்கள், துணை அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இரு நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும், கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், தில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாத எதிா்ப்பில் தங்களின் அனுபவங்களை இரு நாடுகளும் பகிா்ந்து கொண்டுள்ளன என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலில் 26 பேரும், செங்கோட்டை குண்டுவெடிப்பில் 15 பேரும் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments