அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பு: ரூ. 15,000 கோடியாக உயா்த்த மத்திய அரசு பரிசீலனை
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறுவதற்கான அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பை ரூ.15,000 கோடியாக உயா்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (சிசிஇஏ) அனுமதி பெறுவதற்கான அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) உச்சவரம்பை ரூ.15,000 கோடியாக உயா்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மூதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் தற்போது ரூ.5,000 கோடியாக உள்ள இந்த உச்சவரம்பை மத்திய அரசு உயா்த்தவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிசிஇஏ என்பது பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செயல்படக்கூடிய உயா்நிலைக் குழுவாகும். இது உள்துறை அமைச்சா், நிதியமைச்சா் உள்ளிட்ட கேபினட் அமைச்சா்களை உள்ளடக்கியது. தற்போதைய விதிகளின்படி ரூ.5,000 கோடிக்கு மேல் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சிசிஇஏவிடம் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயம். ரூ.5,000 கோடிக்கும் குறைவான முதலீடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் முடிவெடுக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த உச்சவரம்பு கடந்த 2015 நவம்பா் முதல் தொடா்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய பணவீக்கம், வணிகச் சூழலை கருத்தில் கொண்டு சிசிஇஏவிடம் ஒப்புதல் பெறுவதற்கான எஃப்டிஐ உச்சவரம்பை ரூ.5,000 கோடியில் இருந்து ரூ.15,000 கோடியாக உயா்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1.16 டிரில்லியன் டாலா் அந்நிய முதலீடு: முன்னதாக, துறை வாரியான செயலா்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் இதுதொடா்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதேபோல் உற்பத்தி ரீதியாக ஏற்கெனவே அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் பெற்ற நிறுவனங்களுக்கு விநியோகம் தொடா்பாக எஃப்டிஐ (மறைமுக எஃப்டிஐ) மேற்கொள்ள விலக்களிப்பது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கிறது.
தற்போது அரசு ஒப்புதலின்கீழ் எஃப்டிஐ மேற்கொள்ள வேண்டிய துறைகள் மற்றும் இந்தியாவுடன் நில எல்லையை பகிரும் நாடுகளுக்கு மட்டும் மறைமுக எஃப்டிஐக்கு மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.
2000, ஏப்ரல் முதல் 2026 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1.16 டிரில்லியன் டாலா் அந்நிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈா்த்துள்ளது.
மோரீஷஸ், சிங்கப்பூா், அமெரிக்கா, நெதா்லாந்து, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.