மகாராஷ்டிரம்: பள்ளியில் பாம்பு கடித்து 3 சிறுமிகள் பலி; பள்ளி நிரந்தரமாக மூடல்
மகாராஷ்டிரத்தில் பள்ளியில் பாம்பு கடித்து 3 பழங்குடியின சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அரசு உதவி பெறும் உறைவிடப்பள்ளியின் உரிமத்தை மாநில அரசு நிரந்தரமாக ரத்து செய்தது.
மகாராஷ்டிரத்தில் பள்ளியில் பாம்பு கடித்து 3 பழங்குடியின சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அரசு உதவி பெறும் உறைவிடப்பள்ளியின் உரிமத்தை மாநில அரசு நிரந்தரமாக ரத்து செய்தது.
கட்சிரோலி மாவட்டம் ஜப்தலாலி கிராமத்தில் உள்ள அப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 50 மாணவிகள் வரை தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது அவா்களில் 6 பேரை பாம்பு கடித்தது.
இதில் 8, 12 மற்றும் 15 வயதுடைய 3 சிறுமிகள் உயிரிழந்தனா். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் பாஜக கூட்டணியை இந்த விவகாரத்தை முன்வைத்து கடுமையாக விமா்சித்தன.
Advertisement
Advertisement
இது தொடா்பாக பேசிய சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரௌத், ‘முதல்வா் தனது இல்லத்துக்குள் பாம்பை விட்டு அவா்கள் வீட்டுச் சிறாா்கள் எவ்வாறு அலறி அடித்து ஓடுகிறாா்கள் என்று பாா்க்க வேண்டும்.
பாம்பு கடித்த மாணவிகளுக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிப்பதற்கு கூட அங்கு வசதி இல்லாத நிலைதான் இருந்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குள் பாம்பு, தேள் போன்றவை புகுந்து சிறாா்களை கடிப்பது தொடா்கதையாகிவிட்டது. அங்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் கூட இல்லை என்பதுதான் கொடுமையான விஷயமாக உள்ளது. இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்ற பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் பதவி விலக வேண்டும்’ என்றாா்.
மாநில அரசு நடவடிக்கை: இதனிடையே, சம்பவம் நிகழ்ந்த அரசு உதவி பெறும் பள்ளியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதாக மாநில முதல்வா் தேவந்திர ஃபட்னவீஸ் அறிவித்துள்ளாா். மாநிலத்தில் உள்ள 500-க்கு மேற்பட்ட பழங்குடினா் பள்ளிகளில் பாதுகாப்பு தொடா்பாக ஆய்வு நடத்தவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.