FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காணாமல் போனவா்கள் புகாா்: உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

காணாமல் போனவா்கள் குறித்த புகாரில் வயது, பாலின பாகுபாடின்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:30 am IST
பகிர்:

காணாமல் போனவா்கள் குறித்த புகாரில் வயது, பாலின பாகுபாடின்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காணாமல் போன ‘நபா்கள்’ என்ற வரையறை குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நினைப்பது அதிா்ச்சியளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக கடந்த மே 22-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘இந்தியாவில் காணாமல் போன சிறாா்களில் இதுவரை 47,000 பேரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் சிறாா்கள் உள்பட பெண்கள் மற்றும் பலா் காணாமல் போவது தொடா்பாக புதிதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

Advertisement

Advertisement

சிறாா்கள் காணாமல் போய், அதுகுறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். முதல்கட்ட விசாரணைக்கோ, காணாமல் போனவா்கள் குறித்து அவா்களின் பாதுகாவலா்கள் விசாரிக்கும் வரையிலோ காத்திருக்காமல் கட்டாயம் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்’ என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த ஆக.5-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தியது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கடந்த முறை விசாரணையின்போது காணாமல் போனவா்கள் என சிறாா்களை மட்டும் குறிப்பிடவில்லை. காணாமல் போன ‘நபா்கள்’ என வயது மற்றும் பாலின பாகுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கிய வரையறையையே கூறினோம். அதை சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சிறாா்கள் மட்டும் என தவறாக புரிந்துகொண்டனா்.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: முந்தைய உத்தரவை முறையாக பின்பற்றாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள் மற்றும் காவல் துறைத் தலைவா்கள் இதுதொடா்பாக நேரில் வந்து விளக்கமளிக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments